தருமபுரி, ஜூன் 30:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் உறவினர்களை கண்டறியும் வகையில் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர், சட்ட நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தருமபுரி பச்சையம்மன் கோவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கில் ஒகேனக்கல் காவல் நிலைய காவலர் பெருமாள், மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் கணேஷ் மற்றும் சென்னை கைங்கர்யா அறக்கட்டளை அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை அடையாளம் தெரியாதோர் மற்றும் ஆதரவற்றோர் உள்ளிட்ட 219 புனித உடல்கள் மனிதநேய அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். "மரணிப்பவர்களிடமும் மனிதநேயத்தை பகிர்வோம்" என்ற உயரிய நோக்கத்துடன் இச்சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
.gif)

.jpg)