தருமபுரி, ஜூன் 16:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். இந்த பணியிடத்திற்கு மாதந்தோறும் ரூ.27,804 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், இளநிலை சட்டப்படிப்பு (B.L / LL.B) முறையான (Regular) முறையில் பயின்றவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் குழந்தைகள் நலம், சமூக நலம், தொழிலாளர் நலத்துறை அல்லது சட்டம் சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 40 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் வாய்ப்பு
கொள்கை உருவாக்கம் அல்லது அரசு திட்டங்கள் செயல்படுத்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளாக பணியாற்றிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் வயது 62 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து 02.07.2026 மாலைக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தொடர்புக்கு
மேலும் விவரங்களுக்கு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (பழைய கட்டிடம்), தருமபுரி. தொலைபேசி: 63826 12276 குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)