ஒகேனக்கல், ஜூன் 13:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பில்லிகுண்டு மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்களின் குலதெய்வ வழிபாட்டு மரபுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா, பாரம்பரிய கிராமிய முறையில் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நாட்களில் ஸ்ரீ பில்லிகுண்டு மாரியம்மன் சிறப்பு மலர் மற்றும் ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனை தரிசிக்க ஊட்டமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், பக்திப் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மன் மற்றும் பல்வேறு தெய்வங்களின் அலங்கார வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக பங்கேற்றனர். இந்த ஊர்வலம் கிராம மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், திருவிழாவிற்கு மேலும் சிறப்பூட்டியது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திருவிழாவின் நிறைவு நிகழ்வாக கம்பத்தை ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று ஆற்றில் விடும் சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)