பென்னாகரம், மே.01:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில், ராமகொண்டஅள்ளி அரசு பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றிய ரவிச்சந்திரனும் ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு பள்ளியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் தயாநிதி, குமார், சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக பங்கேற்று பாராட்டினர்.
இறுதியாக பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி ரவிச்சந்திரன் கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் முடிவில் தமிழாசிரியர் பெருமாள் நன்றி தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)