பென்னாகரம், மே.01:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை பஞ்சாயத்திற்குட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான சக்தி மிகுந்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த கோயிலில் விநாயகர், சப்த கன்னிகள், நவகிரகங்கள் மற்றும் காவல் தெய்வமான கருப்பசாமி ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விழாவை முன்னிட்டு முன்தினம் மாலை பெத்தானூர் தொந்தி விநாயகர் கோயில் அருகிலுள்ள நாகாவதி ஆற்றங்கரையிலிருந்து பம்பை மேள தாளங்கள் முழங்க பூசைக்கூடை அழைத்து வரப்பட்டது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து இரவு கணபதி ஓமம், நவகிரக ஓமம், சப்த கன்னிகள் ஓமம், கருப்பசாமி ஹோமம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன.
அடுத்த நாள் காலை அம்மனுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 12 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பச்சை நிற ஆடை மற்றும் பூ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜைகளை சதீஷ்குமார் சாஸ்திரி மற்றும் ஹரி பிரசாத் சாத்திரிகள் நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)