பாலக்கோடு, மே.16:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில், சட்டத்திற்கு புறம்பாக வெளி ஆட்களை வைத்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பாலக்கோடு நகரில் உள்ள அரசு மதுபான கடை எண் 2837-ல் ஐந்து விற்பனையாளர்கள் பணியில் இருந்தபோதிலும், நேற்று இரவு அவர்கள் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் மூன்று வெளி ஆட்களை வைத்து மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், வெளி ஆட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கூலி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)