பாலக்கோடு, மே.15:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மெயின் ரோடு தற்போது அபாய சாலையாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நகரப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிக்காக சாலையின் பல பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சாலை அமைக்கும் பணி முழுமையாக நடைபெறாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக பகல், இரவு பாராமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்லும் அபாய நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை முழுமையாக புதிய சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதியடைந்துள்ளனர். அதிகாரிகள் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சிறிதளவும் அக்கறையின்றி செயல்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த பிரச்சினை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காக்கும் நிலை பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)