நல்லம்பள்ளி, மே.19:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஅள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் MGNREGS 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.9.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் நாற்றுப்பண்ணை கூடத்தை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நாற்றுப்பண்ணையில் சொர்க்கம், மகாகனி, காட்டு நெல்லி, வேம்பு, புங்கன், பலா, பூவரசு, செம்மரம், வேங்கை உள்ளிட்ட மொத்தம் 10,000 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பேடறஅள்ளி ஊராட்சியில் மகளிர் திட்டத்தின் மூலம் கோழி வளர்ப்பு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு உறுப்பினருக்கும் 100 கோழிகள் வழங்கப்பட்டதுடன், முட்டைகளை அடைகாக்கும் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டங்கள் மகளிரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)