கம்பைநல்லூர், ஏப்ரல். 28:
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25வது ஆண்டு விழா மற்றும் கல்வியாண்டு நிறைவு நாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைப்பில், மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர்களின் வாழ்த்துகளுடன், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ச. சாக்கம்மாள் தலைமையில் ஆசிரியர்கள், ஊர்ப்பெரியோர், கல்வியாளர்கள், புரவலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.
விழாவில் உதவித் தலைமையாசிரியரும் கணித ஆசிரியருமான திரு. தீர்த்தகிரி வரவேற்புரை வழங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ். மனோகரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பல்வேறு புரவலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் நற்பணி மன்ற நிறுவனர் செ. வெங்கடேசன் மற்றும் அன்னை தெரசா மகளிர் மன்ற செயலர் திருமதி வசந்தி வெங்கடேசன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும், பல ஆசிரியர்கள் மற்றும் புரவலர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பள்ளி புரவலர் திட்டத்தில் இணைத்து பள்ளிக்கு ஆதரவளித்தனர்.
விழாவில் மாணவ-மாணவியர்களின் தனித்திறன் நிகழ்ச்சிகள், நாடகங்கள், வண்ணமயமான நடனங்கள், தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் பொதுமக்களை கவர்ந்தன. மேடை மற்றும் ஒலி-ஒளி வசதிகளை முன்னாள் வார்டு உறுப்பினர் சக்திவேல் ஏற்பாடு செய்து உதவினார். பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் விழா சிறப்பாக நடைபெற்றது.
இறுதியாக அறிவியல் ஆசிரியர் திரு. ஆறுமுகம் நன்றி உரையாற்றி விழா நிறைவடைந்தது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)