தருமபுரி, ஏப்ரல். 15:
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டியில், அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வையற்ற மற்றும் குறைப் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பிரெய்லி முறையில் சிறப்புக் கல்வி வழங்கப்படுகிறது.
மேலும், இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, உணவு, பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச விடுதி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. கணினி வழி கல்வியும் இங்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 2026–2027 கல்வியாண்டிற்காக 5 முதல் 12 வயதுக்குட்பட்ட பார்வைத்திறன் குறைபாடுடைய சிறுவர், சிறுமியர்கள் இப்பள்ளியில் பாதுகாப்புடன் தங்கி கல்வி பயில முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தலைமையாசிரியரை (தொலைபேசி: 9543025483) தொடர்பு கொள்ளலாம். பள்ளி முகவரி: பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, இலக்கியம்பட்டி, இராஜாஜி நீச்சல் குளம் அருகில், தருமபுரி – 5. தகுதியுடைய மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து அரசு வழங்கும் இவ்வசதிகளை பெற்றிடுமாறு பெற்றோர்களிடம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
.gif)

.jpg)