தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தருமபுரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நியூ காலனி, பிடமனேரி, ஆட்டுக்காரன்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் முரசு சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் இளங்கோவன் பேசுகையில், திமுக அரசு அமைந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும், சிப்காட் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதுடன், விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்றும், ஏரி மற்றும் குளங்களுக்கு நீர் நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் விக்னேஷ்குமார், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், பிரகாஷ், செந்தாமரைக்கண்ணன், ராஜேஷ்கண்ணன், மஞ்சுநாதன், விக்னேஷ், நாரேந்திரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் டி.எல். காவேரி, தலைமை கழக பேச்சாளர் டி.ஏ. ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)