தருமபுரி - மார்ச். 21:
தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர், அவர்களின் ஆத்மசாந்திக்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள திருவல்லம் பரசுராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வமைப்பு மனிதநேய சேவையாக ஆதரவற்றோரின் இறுதி சடங்குகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஆண்கள் 149, பெண்கள் 17, குழந்தைகள் 4, ஏழ்மை காரணமாக உயிரிழந்தோர் 13, வடமாநிலத்தவர்கள் 14 என மொத்தம் 197 பேரின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆத்மசாந்தி பூஜையின் ஒரு பகுதியாக, முன்னதாக காசி, ராமேஸ்வரம், காவிரி ஆறு போன்ற புனித ஸ்தலங்களிலும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது திருவல்லம் பரசுராமர் கோவிலில் 197 பேரின் ஆத்மசாந்திக்காக திதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், முனைவர் கிருஷ்ணன், சண்முகம் மற்றும் தன்னார்வலர்கள் குணசீலன், அலெக்சாண்டர், மனிதம் போற்றுவோம் மணிபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூஜை செய்தனர். இந்நிகழ்வு மனிதநேய சேவையின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)