தருமபுரி, மார்ச் 30:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் “என் நாடு என் ஓட்டு” என்ற முழக்கத்துடன் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ் அவர்கள் இன்று (30.03.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, “என் நாடு என் ஓட்டு” என்ற கருத்தை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்ட சக்தி கைலாஷ் கல்லூரி மாணவியர்கள் இதில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, “ஜனநாயகத்தின் மீது ஈடுபாடுடைய இந்திய குடிமக்களாகிய நாம்…” என தொடங்கும் 100% வாக்குப்பதிவு உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க, மாணவியர்கள் அனைவரும் ஒன்றாக உரத்த குரலில் கூறி உறுதி எடுத்தனர். மேலும், தேர்தல் விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் “தேர்தல் திருவிழா”, “தமிழ்நாட்டின் பெருவிழா”, “என் நாடு என் ஓட்டு” போன்ற கருப்பொருள்களுடன் கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அதேபோல், ரோபோட் (Robot) மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) டாக்டர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், வட்டாட்சியர் ஜெ. சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

