பள்ளிக் கல்வித் துறை சார்பில், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் 2025–26ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்கி, வரும் 26.03.2026 வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன. இதனையடுத்து, தருமபுரி மாவட்டத்திலும் இத்தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் 108 அரசுப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 63 தனியார் பள்ளிகள் என மொத்தம் 175 பள்ளிகளைச் சேர்ந்த
-
9,359 மாணவர்கள்
-
9,845 மாணவியர்கள்
என மொத்தம் 19,204 பேர் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வு மாவட்டம் முழுவதும் 84 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
தேர்வுப் பணிகளில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படைகள், வழித்தட அலுவலர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் “ஸ்கிரைப்” எழுத்தாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 3,500 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் உண்மையுடனும் நேர்மையுடனும் தேர்வை எழுத வேண்டும் என்றும், தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக மேற்கொண்டு, எந்த தவறும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா உடனிருந்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)