தருமபுரி, ஜன. 08:
தருமபுரி வெள்ளோலை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலை அவசியம் என்ற நோக்கில், பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மூன்று மாத காலம் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் வீதம், மொத்தம் 24 வகுப்புகள் சிலம்பம் தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை சிலம்பம் பயிற்சியாளர் முருகன் மாணவிகளுக்கு முறையாக கற்றுக் கொடுத்தார். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் மாணவிகள் அனைவரும் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
சிலம்பம் பயிற்சியின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி ஊக்குவித்தனர். இத்தகைய தற்காப்பு பயிற்சிகள் மாணவிகளின் தன்னம்பிக்கையை உயர்த்துவதோடு, உடல் மற்றும் மன வலிமையையும் வளர்க்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


