தருமபுரி – ஜன. 09:
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம் எஸ்.கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கான சிலம்பம் தற்காப்பு பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வளர தற்காப்புக் கலை மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் வீதம், மூன்று மாதங்களில் மொத்தம் 24 வகுப்புகள் நடத்தப்பட்டு, சிலம்பம் பயிற்சியாளர் முருகன் மாணவிகளுக்கு முறையான பயிற்சியை வழங்கினார்.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகள் இதில் ஆர்வமுடன் பங்கேற்று சிலம்பம் தற்காப்பு பயிற்சியை கற்றுக்கொண்டனர். பயிற்சியின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவிகளை பாராட்டி ஊக்குவித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய ஆசிரியர்கள், இத்தகைய தற்காப்பு பயிற்சிகள் மாணவிகளின் தன்னம்பிக்கையை உயர்த்துவதோடு, உடல் வலிமையும் மன உறுதியும் வளர்க்கும் என தெரிவித்தனர். மேலும் எதிர்காலத்திலும் இவ்வகை பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

