தருமபுரி, டிச.22:
தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்றும் ஏழ்மையில் உயிரிழக்கும் நபர்களின் புனித உடல்களை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் மனிதநேய சேவையை மை தருமபுரி தொண்டு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இதேபோல், மொரப்பூர் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மற்றொரு முதியவர் வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, மை தருமபுரி அமைப்பினர் அவர்களை தங்களின் உறவினர்களாகக் கருதி, இரண்டு முதியவர்களின் புனித உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தி, அனைத்து மத மரபுகளையும் மதித்து நல்லடக்கம் செய்தனர். இந்த மனிதநேய பணியில், மொரப்பூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகன், காவலர் சிலம்பரசன், தொப்பூர் காவலர் அறிவழகன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர்கள் கணேஷ், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 183 ஆதரவற்ற புனித உடல்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். இந்த சேவை பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும், சமூக மதிப்பையும் பெற்றுள்ளது.

.jpg)