அரூர், டிச.17:
அரூர் வட்டம் மற்றும் உள்வட்டத்திற்குட்பட்ட வள்ளிமதுரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 488 பயனாளிகளுக்கு ரூ.4.76 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாம் இன்று (17.12.2025) நடைபெற்றது. நிகழ்வில் அளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
முகாமில், வருவாய்த் துறையின் சார்பில் 203 பயனாளிகளுக்கு ரூ.4.25 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.4.40 இலட்சம் மதிப்பிலான இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத் துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.26.45 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன்களும், வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.43.50 இலட்சம் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.97 இலட்சம் மதிப்பிலான வேளாண்மை இயந்திர உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.51.28 இலட்சம் மதிப்பிலான களை எடுக்கும் இயந்திரம் மற்றும் தீவண புல் நறுக்கும் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்ட உதவிகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 116 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.42,000 மதிப்பிலான மூன்று சக்கர வாகனமும் வழங்கப்பட்டது.
மேலும், கீரைப்பட்டி புதூர் இருளர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மயான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாட்கோ மூலம் சுற்றுச்சுவர் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். முகாமில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறை கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நவலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.00 இலட்சம் மதிப்பிலான கால்வாய் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, பழங்குடியினர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.jpg)