பாலக்கோடு, அக். 23 -
பாலக்கோட்டில் தக்காளி சந்தை செயல்பட்டு வருகிறது. பாலக்கோடு மாரண்டஅள்ளி காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து பாலக்கோடு மார்க்கெட்டில் கொள்முதல் செய்து வருகின்றனர். பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.
தக்காளி சந்தையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக, ஒரு கிலோ தக்காளி 10 முதல் 12 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான நிலையில், தற்போது தக்காளி விலை திடிர் உயர்வு அடைந்துள்ளது. தற்போது, ஒரு கிலோ தக்காளி 30 ரூபாயிருந்து 45 ரூபாய் வரையும், 16 கிலோ கொண்ட கூடை தக்காளி 350 முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வெளி மார்க்கெட்டில், சில்லறை விற்பனைகடைகளில் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாயிருந்து 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்தால் மேலும் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். திடிர் விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.