பாலக்கோடு, அக். 09 -
பாலக்கோடு அருகே கண்சால்பைல் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவுக்குப் பிறகு 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர். மதிய உணவு உண்ட பிறகு சில மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றனர்.
அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல்நிலை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் மருத்துவமனைக்கு வந்து மாணவர்களின் உடல்நல நிலையை நேரில் கேட்டறிந்து, தேவையான சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். மேலும் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.