தருமபுரி, அக். 11 -
தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக “மை தருமபுரி அமரர் சேவை” என்ற மனிதநேய இயக்கத்தின் மூலம் ஆதரவின்றி இறந்தோர்களின் புனித உடல்களை தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமைப்பினர், மீண்டும் ஒரு மனமுள்ள பணியை செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, விசாரணையில் அவர் ஆதரவற்றவர் என தெரியவந்தது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரின் உடலை கிருஷ்ணகிரி காவல் நிலைய காவலர் பிரபாகரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் சையத் ஜாபர், தன்னார்வலர்கள் இந்திரா, சத்யராஜ், செல்வ முருகன், முனிராமன் ஆகியோர் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.
இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 169 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் வெளிப்படுத்தும் இந்தச் செயலால், மை தருமபுரி அமைப்பினர் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.