அரூர். அக். 22 -
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பா பருவ நெல் வயல்களில் சில இடங்களில் தண்டுத்துளைப்பான் மற்றும் புகையான் போன்ற பூச்சி தாக்குதல்கள் காணப்படுவதால், விவசாயிகள் உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேளாண்மை இணை இயக்குநர் (பொது) திருமதி ஆர். ரத்னாகர் அறிவுரை வழங்கினார்.
நெல் பயிரில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் ஏற்பட்டால், நெல் மணிகள் பால் பிடிக்காமல் வெண்கதிர்களாக மாறும். இதனைத் தவிர்க்க:
-
நெல் செடிகளை நெருக்கமாக நடவதை தவிர்க்க வேண்டும்.
-
முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனிப் பகுதியை கிள்ளி விட்டு நடவு செய்வது அவசியம்.
-
மாலை நேரங்களில் விளக்குப் பொறிகளை அமைத்து தாயந்துப் பூச்சிகளை அழிக்கலாம்.
-
அதிக தாக்குதல் ஏற்பட்டால், புளுபென்டமைடு 20% WG – 50 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP – 400 கிராம் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
புகையான் தாக்குதல் ஏற்பட்டால், பயிர்கள் தீக்காய்ந்தது போல் காய்ந்து காணப்படும். இதனை கட்டுப்படுத்த:
-
பைமெட்ரோசின் 50% WG – 120 கிராம், அல்லது
-
குலோதியனிடின் 50% WG, அல்லது
-
பிபுரோனில் 5% SC – 400 மில்லி 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
ஆனை கொம்பன் ஈ தாக்குதல் தென்பட்டால்,
-
தாயோமீதோக்சாம் – ஏக்கருக்கு 80 கிராம் அல்லது
-
பிபுரோனில் 5% SC – 400 மில்லி 200 லிட்டர் தண்ணீருடன் தெளிக்கலாம்.
மேலும், விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்தவும், யூரியா மற்றும் டி.ஏ.பி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க, வயல் நிலங்களில் சரியான வடிகால் வசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அரூர் வேளாண்மை உதவி இயக்குநர் திரு. ஆர். இளங்கோவன் அவர்கள் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ஆர். ரத்னாகர், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி சிவசங்கரி, வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் அரூர் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)