தருமபுரி, செப்டம்பர் 16, 2025 (ஆவணி 31) -
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்களின் இல்லங்களுக்கே அரசுத் துறைகளின் சேவைகளை வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து, மாநிலம் முழுவதும் தொடங்கி வைத்துள்ளார். இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி பிபிசி திருமண மண்டபம், நூலஅள்ளி பஞ்சாயத்து அலுவலகம், நல்லம்பள்ளி ஒன்றியம் தின்னஹள்ளி PUMS பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் இன்று (16.09.2025) இந்த திட்ட முகாம்கள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் முகாம்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், சுமார் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், வேலை உறுதி அட்டைகள், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கினார்.
மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் 3 வரை மொத்தம் 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.