பாலக்கோடு, செப். 09 | ஆவணி 24 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திருமல்வாடி கிராமத்தில் உள்ள சமுதாயக் கட்டிடத்தில், பட்டுவளர்ச்சித் துறை சார்பில் ‘என் பட்டு என் பெருமை’ திட்ட செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. உதவி ஆய்வாளர் கனகவேல் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பட்டு விவசாயிகள் பங்கேற்றனர்.
மத்திய பட்டுவாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ், மல்பெரி தோட்ட பராமரிப்பு மற்றும் புழு வளர்ப்புமனை கிருமிநீக்கம் குறித்த செயல் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி மகேஷ், தோட்ட பராமரிப்பு மற்றும் கிருமிநீக்கம் தொடர்பாக கள செயல் விளக்கத்தை அளித்தார். மேலும், மல்பெரி தோட்ட பராமரிப்பு, மண் பரிசோதனை, மல்பெரி நடவு, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், மண்வளம் பாதுகாப்பு, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை ஆகிய அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இளநிலை ஆய்வாளர்கள் கேசவராம்குமார், மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிகாட்டினர். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, பட்டு விவசாயத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை நேரடியாக கற்றுக்கொண்டனர்.
.gif)

