தருமபுரி, செப். 09 | ஆவணி 24 -
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை அறிவித்து, கடந்த 15.07.2025 அன்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 15 ஜூலை முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 15.07.2025 முதல் 03.10.2025 வரை 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகள் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியம் செட்டிக்கரை RPRS திருமண மஹாலில் நடைபெற்றுவரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (09.09.2025) நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இம்முகாமில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் வட்டாட்சியர்கள் திரு. ராஜராஜன், திரு. சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. குமரேசன், அரசு துறை அதிகாரிகள், இன்றைய மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.