தருமபுரி, 08 செப்டம்பர் 2025 (ஆவணி 23)
தருமபுரி மாவட்டம் கடத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக நெற்பயிர்களில் நோய்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கடத்தூர், மணியம்பாடி பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல்வயல்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கி, அதில் குறிப்பிட்டுள்ள மேலாண்மை முறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் திரு. சிவக்குமார் மற்றும் திரு. செந்தில் அவர்கள், நோய் தாங்கி வளரும் இரகங்களை பயிரிடுதல், நோயற்ற விதைகளைப் பயன்படுத்துதல், வயலில் நீரை வடிகட்டுதல் (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர), களைகள் மற்றும் மாற்றுப் பயிர்களை அழித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்ளின் (120 கிராம்) + காப்பர் ஆக்ஸிகுளோரைடு (500 கிராம்) ஆகியவற்றை 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி தெளிக்க வேண்டும் என்றும், நெல்லில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் முறைகளை விவரித்தனர்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ரத்தினம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பூ. சு. சித்ரா, வேளாண்மை துணை இயக்குநர் (மா.தி) திரு. இராஜகோபால், வேளாண்மை உதவி இயக்குநர் திரு. பழனிவேல் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
.gif)
