தருமபுரி, செப்டம்பர் 10 (ஆவணி 25):
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள், இணைய வழி இ-பட்டாக்கள் வழங்கல் நிலை, “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமின் செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவலர்கள் விவாதித்தனர்.
இக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மாறுதல், பிறப்பு சான்றிதழ், மின்இணைப்பு பெயர் மாற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டைகள், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டைகள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட மனுக்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆய்வில் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
மேலும், நாளை (11.09.2025) தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் தன்னார்வலர்கள் வீடுகளுக்கே சென்று மனுக்கள் பெற்றதா என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, அரூர் கோட்டாட்சியர் திரு. செம்மலை, சபாதி தனித்துணை ஆட்சியர் திரு. சுப்பிரமணியன், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகரன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், உதவி இயக்குநர் (நில அளவை) திரு. செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

