கடத்தூர், செப்டம்பர் 24 | புரட்டாசி 08 :
கடத்தூர் MCS மஹாலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் இன்று (24.09.2025) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் முன்னிலையிலும், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் T. சந்திரசேகர் தலைமையிலும் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி வாரியாக SIR செயல்படுத்துவது, வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) மூலமாக ஆய்வு மேற்கொள்வது மற்றும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் திமுகவின் மாவட்ட அவைத் தலைவர் கே. மனோகரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் எவரெஸ்ட் நரேஷ்குமார், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ. சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. சித்தார்த்தன் ஆகியோரும், ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், சட்டமன்றத் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.