தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், மீன்வளத் துறை சார்பில் ஆறுகளில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் கீழ் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி ஆகியோர் இணைந்து இன்று (13.09.2025) ஆற்றில் விடுதலை செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், உள்நாட்டு மீன்வளங்களை பாதுகாத்து பெருக்குதல், சேல்கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன்களின் உற்பத்தியை அதிகரித்தல், மேலும் இந்திய பெருங்கெண்டை மீனினங்களின் குறைந்துபோகும் எண்ணிக்கையை சீரமைத்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 2022–23 முதல் 2024–25 ஆம் ஆண்டுவரை காவிரி மற்றும் தென்பெண்ணையாற்றுகளில் மொத்தம் 9.26 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிகழ்வின் மூலம் 2025–26 ஆம் ஆண்டுக்கான மீன்குஞ்சுகள் இருப்புத் திட்டமும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீன் உற்பத்தி அதிகரித்து, ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு நிலையான மீன்பிடிப்பு வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் செல்லியம்பட்டியில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தினை பார்வையிட்டு, உணவின் தரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் திரு. விஜயராகவன், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. லோகநாதன், திரு. சக்திவேல், அரசு அலுவலர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)