தருமபுரி, செப்டம்பர் 27 | புரட்டாசி 11 :
தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்றும், ஏழ்மையில் இறந்தவர்களின் புனித உடல்களை தங்கள் உறவாக எண்ணி கடந்த மூன்று ஆண்டுகளாக நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர், நேற்று மேலும் ஒரு நற்பணியை செய்துள்ளனர்.
மொரப்பூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாம்பல்பட்டி அருகே, சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்தார். அவரைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காத நிலையில், மொரப்பூர் ரயில்வே காவல் நிலைய காவலர் தேவராஜ், ஜெயப்பிரியா ஆகியோரின் முன்னிலையில், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சையது ஜாபர், பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இதுவரை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் 168 ஆதரவற்றும் ஏழ்மையில் உயிரிழந்தோர் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.