தருமபுரி, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் ரூ.24.19 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாடு மற்றும் பழுதுபார்த்தல் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநருமான திருமதி ஐ.சா. மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., முன்னிலையில் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி வட்டம் சோகத்தூரில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத்திட்டம் (2024–25) கீழ் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் தருமபுரி–பாப்பாரப்பட்டி இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அவர் ஆய்வு செய்தார். காரிமங்கலம் வட்டம் கும்பாரஅள்ளியில், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில், NH44 முதல் அகரம் ரோடு வழியாக குள்ளன்கொட்டாய் வரை 3.80 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
அதேபோன்று காரிமங்கலம் வட்டம் எலுமிச்சனஅள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.74 கோடி மதிப்பீட்டில், MM சாலை முதல் எட்டியானூர் வரை 3.50 கி.மீ. தொலைவிற்கு சாலை மேம்பாடு பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். மேலும், காரிமங்கலம் வட்டம் பொம்மஅள்ளியில், புதிய முன்மொழிவு திட்டத்தின் கீழ் MM சாலை முதல் ஒசஅள்ளி வரை 2.40 கி.மீ. தொலைவிற்கு சாலை மேம்பாடு பணிகள் மற்றும் அடிலத்தில் NH44 முதல் சிக்கதிம்மனஅள்ளி வரை 2.40 கி.மீ. தொலைவிற்கு சாலை மேம்பாடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் கோட்டப் பொறியாளர் (நெ) க(ம)ப பெ. நாகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.