அரூர், ஆகஸ்ட் 15 | ஆடி 31 –
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வேப்பம்பட்டி, பொன்னேரி, தீர்த்தமலை உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் முரளி, சந்தானம் ஆகியோர் தலைமையேற்றனர். இக்கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர்களாக தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், கால்நடை துறை அலுவலர்கள், வாக்காளர் பெருமக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பினர், மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவி குழுவினர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியில் “சாலை விதிகளை மதிப்போம் – உயிர் சேதம் தவிர்ப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்போம் – சுகாதாரமாக வாழ்வோம், மரம் வளர்ப்போம் – மழை பெறுவோம், மழை நீர் உயிர் நீர்” என அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.