பாலக்கோடு, ஆடவை (ஆனி) 09-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ராஜாதோப்பு முனியப்பன் கோயில் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில் ஏற்பட்ட மோதலில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடையே தாக்குதல் நடந்தது. அந்த பகுதியில் வசிக்கும் கந்தசாமி (வயது 50) என்பவர், கடந்த ஜூன் 19ம் தேதி தனது விவசாய நிலத்தில் உழவு பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த வேடியப்பன் (30) என்பவர், "இந்த நிலத்தில் உழவு செய்யக்கூடாது" என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி வெறுப்பாக மாறி, இருவரும் தங்கள் குடும்பத்தினரை அழைத்து ஒருவரை ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கந்தசாமி, வேடியப்பன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் கந்தசாமி (58), வடிவேல் (41), முத்துகவுண்டன் (45), பாப்பாத்தி (50), வேடியப்பன் (30), முனியப்பன் (32), ராஜாம்மாள் (55) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.