அரூர், ஜூன் 10:
தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி வட்டாரத்தில் உள்ள பின்தங்கிய மலைக்கிராமப் பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி மாணவர்களுக்கு, சேவை அமைப்பான 'மை தருமபுரி' சார்பில் இன்று குளிர்கால மேலங்கிகள் (Sweaters) வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு மனிதநேய சேவைகளை 'மை தருமபுரி' அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மலைக்கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அரூர் கல்வி வட்டத்தில் உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட அரசநத்தம் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி மற்றும் கலசப்பாடி உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சேர்ந்த 248 மாணவ, மாணவியருக்கு குளிர்கால மேலங்கிகளை வழங்கினர்.
மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கிருஷ்ணன், தன்னார்வலர் கோகுல்ராஜ் மற்றும் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் மாணவர்களுக்கு மேலங்கிகளை வழங்கினர். இந்நிகழ்விற்கு ஆசிரியர் தமிழரசன் உறுதுணையாக இருந்தார்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் வனிதா (அரசநத்தம்), குமார் (கலசப்பாடி) மற்றும் ஆசிரியர்கள் சதீஸ், சுதா ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அமைப்பினரின் இந்த மனிதம் மிக்க செயலுக்கு அப்பகுதி மக்களும், ஆசிரியர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக