தருமபுரி, ஜூன் 10:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2025) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தளவாய்அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் பி.அக்ரஹாரம் கால்நடை மருந்தகம் ஆகியவற்றில் இந்த ஆய்வு நடைபெற்றது.
முதலில், தளவாய்அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியர், அங்குள்ள சமையலறைக் கூடத்தின் தூய்மை மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன்கள் குறித்துக் கேட்டறிந்தார். பாடங்கள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டு, சரியாகப் பதிலளித்த மாணவர்களைப் பாராட்டி, பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பி.அக்ரஹாரத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதா என கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இளங்குமரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக