பாலக்கோடு, ஆடவை (ஆனி) 10-
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ள தீம்சேனபள்ளி பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக சாலை ஓரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சாலை வழியாக சென்ற பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை கவனித்தனர். அருகே சென்று பார்த்த போது குழந்தை சடலமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பஞ்சப்பள்ளி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை கைவிட்டவர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.