பாலக்கோடு, ஆடவை (ஆனி) 10-
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் கிராமத்தில் கடந்த 25-ஆம் தேதி நடந்த தீவிபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரியான சக்திவேல் (வயது 41) மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் தகர்சீட்டால் அமைக்கப்பட்ட மேல்மாடி வீட்டில் குடியிருந்தனர். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு இருவரும் வியாபாரத்திற்காக புறப்பட்டுச் சென்றனர்.
அன்று மதியம் சுமார் 2 மணியளவில், வீட்டில் இருந்து புகை வெளியேறுவது போலக் காணப்பட்டதை அப்பகுதி மக்கள் கவனித்து, உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் தீ விரைவாக பரவியதால், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1,34,000 பணம், சுமார் நான்கரை பவுன் தங்க நகைகள், பட்டு புடவைகள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்கள், மற்றும் சாமான்கள் தீயில் கருகி நாசமானது.
தீ விபத்து ஏற்பட்டது மின் கசிவினால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.