பாலக்கோடு, ஆடவை (ஆனி) 11 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு, இந்து அறநிலையத் துறையின் நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (ஜூன் 26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வட்டக்குழு தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், முனிரத்தினம், சவுந்திரபாண்டியன், சதீஷ், ஹரிகரன், முரளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட குழு உறுப்பினர் கலாவதி, வட்டச் செயலாளர் கார்ல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பாலக்கோடு தாலுக்கா ஜெர்தலாவ் பஞ்சாயத்து திம்மனஅள்ளியில் உள்ள வெங்கடரமண சுவாமி கோயிலின் மானிய நிலங்களில் கடந்த 33 ஆண்டுகளாக குத்தகை பதிவு அடிப்படையில் வசித்து வரும் பொதுமக்களை வெளியேற்றும் அறநிலையத் துறை நடவடிக்கைகளை கண்டித்தனர். மேலும், கோவில் மானிய நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு உரிமை பட்டா உடனடியாக வழங்கப்பட வேண்டும், அவர்களை வேறு இடத்துக்கு இடம்பெயர்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்படுகின்ற குடிமக்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்துக்குத் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.