பென்னாகரம், ஆடவை (ஆனி) 11-
தருமபுரி மாவட்டம் பென்னகரத்தை அடுத்த செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே தீயில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, பென்னாகரம் தீயணைப்பு நிலையம் சார்பாக நடை பெற்றது. இதில் எம். ரவிக்குமார் (நிலை அலுவலர் – போக்குவரத்து) தலைமையிலும், சிறப்பு நிலை அலுவலர் அ. முத்துக்கிருஷ்ணன் முன்னிலையிலும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தற்காப்பது எப்படி, புகைமண்டலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகள், மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்குவது மற்றும் அவசர காலங்களில் 101, 102 போன்ற எண்ணுக்கு தகவல் வழங்குவது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் வழங்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய பணியாளர்கள் சிதம்பரம், செம்மலை, கார்த்திக், இளங்கோவன் ஆகியோர் நேரில் ஒத்திகை செய்து காட்டினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதில் ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா, சத்துணவு பணியாளர் அம்பிகா உள்ளிட்டோர் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.