பாலக்கோடு, ஆடவை (ஆனி) 11-
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில் தன்னார்வலர்களுக்கான பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் திருத்தணிமுருகன் மற்றும் செல்வம் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். பயிற்சியின் முக்கிய நோக்கம், தென்மேற்கு பருவமழையின் போது திடீரென ஏற்படும் வெள்ளநீர் சம்பவங்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதாகும்.
பயிற்சியின் போது, கிணறு, ஆறு மற்றும் ஏரிகளில் தவறுதலாக சிக்கிக்கொள்ளும் போது எவ்வாறு தப்பிக்கலாம், நீளமான குச்சி, கயிறு போன்றவற்றின் உதவியுடன் மற்றவர்களை எவ்வாறு மீட்பது, மரக்கட்டைகள், டியூப்கள், பிளாஸ்டிக் கேன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி உயிர் பாதுகாப்பது ஆகிய விடயங்கள் விளக்கமாக கூறப்பட்டன.
மேலும் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும், 101 மற்றும் 102 எண்கள் மூலம் அவசர உதவியை எவ்வாறு பெறலாம் என்பதையும் விளக்கினர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் சிறப்பு நிலை அலுவலர் மகேந்திரன் பயிற்சி அளித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.