தருமபுரி, ஜூன் 10-
தமிழ்நாடு உடல்நலக் கல்வியாளர் மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக சேலம் லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் 07-06-2025 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன் அவர்களுக்கு 'சிறந்த உடற்கல்வி இயக்குனர்' விருது வழங்கப்பட்டது.
கடந்த 29 ஆண்டுகளாக உடற்கல்வித் துறையில் சேவையாற்றிய முனைவர் பாலமுருகன், உடற்கல்வி ஆய்வாளராகவும் கல்லூரி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆயிரக்கணக்கான மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தி பலரை அரசுப் பணிகளில் இடம்பெறச் செய்துள்ளார்.
கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் வழங்கியமை, தென் மண்டல மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்தியமை, தர்மபுரி மாவட்டத்தில் அகில இந்திய பள்ளிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியமை போன்ற சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவரது சாதனைகளைப் பாராட்டி கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன், மண்டல கல்வி இணை இயக்குனர் முனைவர் பா.சிந்தியா செல்வி உள்ளிட்டோர் வாழ்த்துக் கூறியுள்ளனர். இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர், தமிழக நல்லாசிரியர், பணி நிறைவு பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், கல்வி மாவட்ட சிறந்தவர் போன்ற பல்வேறு வகைகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக