தருமபுரி, ஆடவை (ஆனி) 10-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நேற்று (24.06.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் இந்த முகாமில் பங்கேற்று, மொத்தம் 17 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், இலவச வீட்டு மனை பட்டா, வீடு கட்ட பணி ஆணைகள், கெசட்டில் பெயர் மாற்ற ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் அவர் கூறியதாவது: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் ஊக்கத்துடன், திருநங்கைகள் நலவாரியம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள், சுயதொழில் மானியம், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரம், வீட்டு மனை, வீடு, பேருந்து பாஸ், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தற்போது 166 திருநங்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், 32 பேர் ரூ.1,500 ஓய்வூதியம், 95 பேர் மருத்துவ காப்பீடு அட்டைகள், 99 பேர் வீட்டு மனை பட்டா, 105 பேர் குடும்ப அட்டை ஆகிய சேவைகள் பெற்றுள்ளனர். மேலும், 4 பேர் சுயதொழில் உதவித் தொகை பெற்று வாழ்க்கையை முன்னேற்றிக்கொண்டு இருக்கின்றனர்.”
இம்முறை நடைபெற்ற முகாமில் 7 பயனாளிகளுக்கு அடையாள அட்டை, 3 பேருக்கு வீட்டு மனை பட்டா, 1 பயனாளிக்கு வீடு கட்ட பணி ஆணை, 6 பேருக்கு கெசட்டில் பெயர் மாற்ற ஆணை என மொத்தம் 17 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் முதல்முறையாக, 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலவாரியத்தை அமைத்து சமூக அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு முகாம்கள், திருநங்கைகள் சமுதாயத்திற்குள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அரசு உதவிகளை ஒரு இடத்தில் வழங்கும் நோக்கத்திலுமாக நடைபெறுகின்றன.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கலாவதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலசுப்பிரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் திருநங்கை பயனாளிகள் கலந்து கொண்டனர்.