நல்லம்பள்ளி, ஆடவை (ஆனி) 10-
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள நவீன நூலகத்திற்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ₹20,000 மதிப்பில் பொது அறிவுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 23.06.2025 அன்று இந்த புத்தகங்களை வழங்கி வைத்தார். இந்நூல்கள் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேர்க்கை குறித்த விழிப்புணர்வு மற்றும் நேரடி வழிகாட்டல் சேவையாக, பாரதியார் தெருவில் வசிக்கும் மாணவி விஷ்ணுப்ரியாவை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவருக்கு வேளாண்மைப் பாடப்பிரிவில் உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்தார். அதேபோல், மாணவன் ஜெயபிரகாஷிற்கு அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் சேர்க்கை பெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்கும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “மாவட்ட கட்டுப்பாட்டு அறை” இயங்கி வருகிறது. இந்த அறையின் வழியாக மாணவர்களுக்கு வழிகாட்டுதலுடன் சேர்க்கை உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தொழில்நுட்பக் கல்லூரிகள், ஐ.டி.ஐ.க்கள், கலை அறிவியல் கல்லூரிகள் பற்றிய முழுமையான தகவல்களும் பெற முடிகிறது.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த நேரடி சேவையை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், இந்த திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.