பாலக்கோடு, ஆடவை (ஆனி 13)-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில், பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான களஆய்வு பயிற்சி வகுப்பு நேற்று (27.06.2025 - ஆனி 13) நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வில், காவலர்களின் அன்றாட பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் முறைகள், பொதுமக்கள் புகார்கள் பதிவு செய்யும் முறை, முதல் தகவல் அறிக்கையின் (FIR) செயல்முறை, மனுக்களுக்கு ரசீது வழங்கும் நடைமுறை மற்றும் வாக்கி டாக்கி போன்ற உபகரணங்களின் பயன்பாடு உள்ளிட்டவற்றை போலீசார் விரிவாக விளக்கினர்.
மேலும், துப்பாக்கிகளின் வகைகள், அவற்றை பயன்படுத்தும் விதிகள் போன்ற அம்சங்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. பயிற்சிக்குப் பின்பு, மாணவர்கள் கற்றதைக் குறித்தும், அவை தொடர்பான தகவல்களையும் தனித்தனியாக குறிப்பெடுத்தனர்.
இத்தகவல் அடிப்படையிலான பயிற்சி மூலம் மாணவர்கள் காவல் துறையின் முக்கியத்துவத்தையும், அவர்களின் பணிகள் பற்றிய புரிதலையும் விரிவாகக் கற்றுக் கொண்டனர். இவை மாணவர்களின் அறிவுத் திறனை விரிவுபடுத்தும் என்றும், துறை சார்ந்த புரிதலை மேம்படுத்தும் என்றும் காவல் ஆய்வாளர் திரு. பாலசுந்தரம் தெரிவித்தார்.