இக்கூட்டத்தில், SLAS தேர்வின் நோக்கம், மாணவர்களின் கற்றல் நிலை, திறன்களை மதிப்பீடு செய்வது, மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான ஒப்பீடு குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 45,924 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 9.80 இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வுகள், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கற்றல் இடைவெளி மற்றும் பாடப்பிரிவு பலவீனங்களை அறிதலுக்கான முக்கிய கருவியாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தின் முடிவுகள் மாநில சராசரியுடன் ஒப்பிடும்போது, 3 மற்றும் 8 ஆம் வகுப்புகள் சமமாகவும், 5ஆம் வகுப்பு சிறிதளவு பின்தங்கியதாகவும் காணப்பட்டது. பெண் மாணவர்களின் செயல்திறன் ஆண் மாணவர்களைவிட சிறப்பாக உள்ளது என்றும், பள்ளிக்கல்வி துறை சிறந்த மனித வளத்தை உருவாக்கும் தூணாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு வட்டங்களின் கணித, சுற்றுச்சூழல், தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்களின் செயல்திறனைப் பட்டியலிட்டு, பயிற்சி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு கல்வி நிர்வாகிகள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் இடம் பெற்றன.