தருமபுரி, ஆடவை (ஆனி) 13-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.06.2025) நடைபெற்றது. கடந்த 30.05.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், வருவாய் துறையை சார்ந்த பட்டா தொடர்பான மனுக்களில் இருந்து 4 பயனாளிகளுக்கு பட்டாவில் உறவுமுறை மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நிலம் உட்பிரிவு செய்தல் போன்ற உரிய திருத்த ஆணைகள் வழங்கப்பட்டன.
மாநிலத்திலேயே விவசாயிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில், 2025-2026ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 4180 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விதை மற்றும் உரங்களுக்கான போதிய இருப்புகள் உள்ள நிலையில், 1,088 மெட்ரிக் டன் விதை இலக்கில், தற்போது 39.906 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 41,030 மெட்ரிக் டன் உரத் தேவைக்காக தற்போது 13,531 மெட்ரிக் டன் உரங்கள் கிடைக்கின்றன.
உயிர் உரங்களும் விவசாயிகளுக்காக விரிவாக கிடைக்கின்ற நிலையில், 9,043 விவசாயிகள் தற்போது 7382.06 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பட்டு வளர்ச்சித் துறையில் 542 ஏக்கர் இலக்கில், 82 ஏக்கரில் மல்பரி பயிரிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் 3671 விவசாயிகளுக்கு ₹3941.10 இலட்சம் பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது சர்க்கரை ஆலைகளில் கூடுதல் சர்க்கரை இருப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தங்களது திட்டங்களை விவசாயிகளுக்கு விளக்கினர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அனைத்து துறை அலுவலர்களும் அரசு உதவித் திட்டங்களை பயனாளிகளிடம் நேரில் கொண்டு சேர்க்க உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, நபார்டு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.