பாலக்கோடு, ஆடவை (ஆனி) 08-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கரகதஅள்ளி அருந்ததியர் காலனியில் உள்ள தார்சாலையில் அமைந்துள்ள ஒரு குறுகிய தரைப்பாலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக அந்த பாலத்தின் நடுவே ஏற்பட்ட பெரிய ஓட்டை, அப்பகுதி மக்கள் மற்றும் அங்கே வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அபாயமாக மாறியுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த ஓட்டையில் தவறி விழுந்து பல இடங்களில் காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், சாலையின் அருகாமையில் வசிக்கும் சிறுவர்கள் அந்த ஓட்டையின் அருகே விளையாடுவதால், அவர்களும் விழும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் பலமுறை இது குறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும், “நிதி இல்லை” என காரணம் கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். பல விபத்துகள் ஏற்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்காதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “இந்த ஓட்டை நாளையும் ஒருவரை பலி வாங்கக்கூடும். மாவட்ட நிர்வாகம் இதை அவசரமாக சீரமைக்க வேண்டும்,” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக