தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி பிரிவு சாலையில் இன்று மாலை ஒரு மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதிய விபத்தில் மூன்று வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அண்ணாநகரைச் சேர்ந்த முஜித் (19), அப்துல்லா (20) ஆகிய இருவரும், பாலக்கோடு அருகே எலுமிச்சனஅள்ளியில் உள்ள நண்பர் கோகுல்ராஜ் (20) என்பவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து பேருந்து நிலையம் செல்ல, கோகுல்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் இருவரையும் அழைத்து சென்ற போது, கொண்டசாமனஅள்ளி பிரிவு சாலை அருகே பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அருகே வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.