தருமபுரி, ஆடவை (ஆனி) 10-
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மலேரியா நோய் எதிர்ப்புக்கான விழிப்புணர்வு பேரணி நேற்று (24.06.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மலேரியா ஒழிப்பு மாதத்திற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு வாசித்தார். “மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்திட, சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்ள, தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க, அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறிய அவர், இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா இல்லாத நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தருமபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி, தருமபுரி நகர் மன்றத் தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, அரசு தருமபுரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு. சிவக்குமார், நகர் நல அலுவலர் திரு. இலட்சியவர்ணா, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது. மாணவர்கள் உறுதிமொழியை ஒன்றாக எடுத்துக் கொண்டு, விழிப்புணர்வுக்கு வலுச்சேர்த்தனர்.