இந்த விழிப்புணர்வு நிகழ்வில், 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு, தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக நான்கு ரோடு வரை சென்றடைந்தனர். அதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணி தருமபுரி காவல் அலுவலகத்தில் தொடங்கி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி வரை நடைபெற்றது. நிகழ்வை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற உறுதிமொழியை வாசித்து, மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், உதவி கலால் ஆணையர் திருமதி நர்மதா, அரசுத்துறை அலுவலர்கள், காவலர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.